பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.
இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர். மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.










