மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் அதனை இன்னும் விரிவாக அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நம்ம அண்ணாச்சி நிகழ்ச்சியில் மலையக ஊடகவியலாளர் ஜெயசலீன், சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிணக்கு குறித்த அவரது சட்ட ஆலோசனை என்ன என்பது குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“கூட்டு ஒப்பந்தம் நிராகரிக்கப்படுகின்ற விடயங்களின் போது சட்ட உதவிகளை செய்திருக்கிறேன். தற்போது ஆயிரம் ரூபா விவகாரத்தை எடுத்துக் கொண்டால், ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க வேண்டுமென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இன்னமும் கோணமும் இருக்கிறது. தற்போதுள்ள நிறுவனங்களை நட்டமடையச் செய்து, நிறுவனங்களை கொண்டு நடாத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை குறிப்பாக சீன நாட்டு நிறுவனங்களிடம் தோட்ட ஒப்படைக்கும் சூழ்ச்சி நடப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆகவே, சம்பளப் பிரச்சினையை ஒரு சட்ட பிரச்சினையாக பார்க்காமல் சற்று விரிவாக அணுக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.