ஆசிரியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – திகா கோரிக்கை

அட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் முறையாகவும் நேர்மையாகவும் இடம்பெற வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

எனது அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையகக் கல்வியில் தலையீடு செய்யாமலும், விமர்சனத்துக்கு ஆளாகாமலும் இருந்து வருகிறேன். இருந்தும் மலையக சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு சில விடயங்களை வலியுறுத்த விரும்புகிறேன்.

நாடளாவிய ரீதியில் ஆசிரிய இடமாற்றங்கள் இடம்பெற்று வந்தாலும், அது அட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் தான் இடமாற்றம் இடம்பெறுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி சிலர் பிரசாரம் செய்து வருகின்றார்கள். குறிப்பிட்ட காலம் ஒரு பாடசாலையில் கடமையாற்றிய பிறகு ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. அதேநேரம் இடமாற்றம் இடம்பெறும் போது பாடசாலைகளும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இடமாற்றத்தினால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்து நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டுமேயொழிய மாணவர்களைத் தூண்டி விட்டு, ஆர்ப்பாட்டம் செய்வதும், வகுப்புகளை பகிஷ்கரிக்குமாறு கூறுவதும் மாணவர்களின் ஒழுக்கத்தைப் பாதிக்கும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே பாடசாலையில் தொடர்ந்து கடமையாற்ற வேண்டும் என்று நினைக்காமல் இடமாற்றம் கிடைக்கும் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி சேவை செய்து தமது திறமைகளை நிரூபிக்க வேண்டியது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.

இவ்வாறு இடமாற்றம் நடைபெறும் போது, அதை அரசியலாக்கி சிலர் குளிர்காய நினைப்பது கண்டிக்கத் தக்க விடயம் ஆகும். சில அரசியல்வாதிகள் ஆசிரியர்களையும், பொது மக்களையும் பகடைக் காய்களாக பாவித்து மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் சாதக, பாதகமான மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதையும் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது.

அரசியல்வாதிகள் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில்தான் அக்கறை காட்ட வேண்டும். மாறாக, கல்வித் துறையில் தலையீடு செய்து குளறுபடிகளை ஏற்படுத்துவதிலும் அதில் அரசியல் இலாபம் தேடுவதிலும் குறியாக இருக்கக் கூடாது. நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த, வலப்பனை, கொத்மலை, அட்டன், நுவரெலியா கல்வி வலயங்களில் காணப்படும் குறைபாடுகளை வெளிக் கொணர்ந்து நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மலையகத்தில் ஏற்பட்டு வரும் கல்வி வளர்ச்சி அரசியல் தலையீடுகளால் சீர்குலைந்து போக இடமளிக்கக் கூடாது.

அட்டன் கல்வி வலயத்தில் தமிழர்கள் தொடர்ச்சியாக கல்விப் பணிப்பாளராக இருந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அதை இழந்து விடுவதற்கு அரசியல் தலையீடு காரணமாகி விடக் கூடாது. ஏற்கனவே, அரசியல்வாதிகளின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளால் மத்திய மாகாணத்தில் இருந்து வந்த மேலதிக தமிழ்க் கல்விப் பணிப்பாளர் நியமனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles