” அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்டத்தின் இறம்பொடை பிரதேசத்தில் தோட்டமொன்றில் உள்ள பல குடும்பங்களை, அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தோட்டத்துக்கு விசேட அதிரடிப்படையும் வந்துள்ளது.
இச்சம்பவத்தோடு அரசியல் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு நேரடியாக தொடர்புபட்டுள்ளனர். அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்க்கே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மலையக பெருந்தோட்டங்களில் இன்று புதிய பிரச்சினை ஒன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காலாகாலம் லயன் குடியிருப்புகளில் இருந்தவர்களை அவற்றில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றுவது. இன்று தோட்ட முகாமைத்துவங்கள் எல்லா பகுதிகளிலும் இதனை முன்னெடுத்து வருகின்றது.
தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள் இருந்தால் குடியிருப்பில் இருந்து வளியேற்ற வேண்டும். அதற்குபல அடாவடித்தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று இறம்பொடையிலும் இதனையே செய்துள்ளனர். தோட்டத்தில் வசிக்கும் பல குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பல ஆண்டுகாலமாக இங்கு வசித்தவர்கள் எங்கே போவது என்பதைக்கூட சற்றும் சிந்திக்காமல் செயற்பட்டுள்ளனர். அத்தோட்டத்திற்கு விசேட அதிரடிப்படை அனுப்பட்டுள்ளது. இதனை ஆளும் தரப்பிலுள்ள மலையக அமைச்சர் மற்றும் பிரதிநிதிகளே செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இதன் மூலம் தோட்ட மக்களை அச்சுறுத்தி அவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கான புதிய வழிமுறையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். இனி ஏனைய தோட்ட நிர்வாகங்களும் இதனை முன்னெடுக்க போகின்றது. எமது மக்களிடம் வாக்குகளை, பெற்று அரசியல் பலத்தை பெற்றனர். அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி தனது குடும்பத்தினரின் நலனுக்காக, சகாக்களின் நலனுக்காக அம்மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற வகையில் செயற்படுவது நியாயமானதா?” – என்றார் வேலுகுமார் எம்.பி.
