22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, அடுத்த மாதம் 18 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
நாளை இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கட்டார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி கட்டாரில் 32 அணியினரும் முகாமிட்டுள்ள நிலையில் ரசிகர்களும் குவியத் தொடங்கி விட்டனர். அங்குள்ள ரசிகர் பூங்காவில் ஆட்டம் பாட்டம் என்று குதூகலத்தில் திளைக்கிறார்கள்.
ஒட்டுமொத்த கட்டார் தேசமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே வானுயர கட்டிடங்களில் நட்சத்திர வீரர்களின் புகைப்படங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. கால்பந்து கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ள கத்தார் ரசிகர்கள் உற்சாகமாக பொழுதை போக்க நிறைய ஏற்பாடுகளை செய்துள்ளது.
