“ மொட்டு கட்சியின் இருப்பு என்பது மஹிந்த ராஜபக்சவிடம்தான் தங்கியுள்ளது. எனவே, எவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சி வீழ்ச்சியடையாது. ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெல்வோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மஹிந்த ராஜபக்சவின் படத்தை பயன்படுத்தி நாடாளுமன்றம் வந்தவர்களே கட்சி முடிவுக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செயற்பட்டாலும் மக்களும், கட்சி ஆதரவாளர்களும் கட்சியுடன்தான் நிற்கின்றனர்.
மஹிந்த ராஜபக்சவிடம்தான் கட்சி இருப்பு உள்ளது. எனவே, யார் வெளியேறினாலும் கட்சி விழாது. சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். அது விரைவில் தெரியவரும்.
ஜனாதிபதி தேர்தலில் நாம்தான் வெல்வோம். புதிய வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் எமது வசமே உள்ளார். ஏனைய வேட்பாளர்களுக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெறமுடியாது.” – என்றார்.