கடைசிப் போட்டியில் தென்னாபிரிக்கா அபரா வெற்றி : தொடரைக் கைப்பற்றியது

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசல் பெரேரா 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ரபாடா மற்றும் போர்ச்யுன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக குயின்டன் டி கொக் 59 ஓட்டங்களையும் ஹென்ட்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரை தென்னாபிரிக்க அணி 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

Related Articles

Latest Articles