நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஏழு மாணவர்கள், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா வலய கல்வி காரியாலயத்திற்கு சென்று பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறும், அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
எனினும், இச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,
“ கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு மாணவர்களை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியுள்ளார். இதனால் பிள்ளைகளுக்கு நடக்க கூட முடியாதுள்ளது.” – என்று குறிப்பிட்டனர்.
அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பாடசாலையில் இருந்து குறித்த அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
குறிப்பு ( இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாக தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டால் அது தொடர்பான செய்திகளையும் பதிவிடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.)