ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் இதுவரை எந்தப் பகுதியிலும் கண்ணீர் புகைப் பிரயோகமோ அல்லது தடியடி தாக்குதல்களோ மேற்கொள்ளப்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.
பொலிஸார் தமது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்கின்றனரே தவிர அவர்கள் ஒருபோதும் அரசியலுக்கோ அரசியல்வாதிகளுக்கோ அடிபணிந்து செயல்படுவதில்லையென்றும் சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர்கள் செயற்படுகின்றனரென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம். பி புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, அண்மையில் இடம்பெற்றுள்ள ஜேவிபி யினரின் கூட்டத்தின் போது ஏற்பட்ட சம்பவங்கள்,ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் வீட்டுக்கருகில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் ஆகியவை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புத்திக்க பத்திரன எம்.பி தமது கேள்வியின் போது மேற்படி சம்பவங்கள் அரசியல் தலையீடுகளால் முன்னெடுக்கப்பட்டதா? அவற்றை ஏன் பொலிசார் தடுக்கவில்லையென கேள்வி எழுப்பினார்.










