“ சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்த பிள்ளை, அவர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தாய் வீடு திரும்பலாம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல், கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனுமான அசங்க பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டார். அவருடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே ஐ.தே.க. பொதுச்செயலாளர் இந்த அழைப்பை விடுத்தார்
.“ ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது இராணுவமுகமாக மாறிவருகின்றது. ஓய்வுபெற்ற – ஒதுக்கப்பட்டவர்கள் அக்கட்சியில் இணைந்துவருகின்றனர். இதனால் சஜித்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதுகூட ஒன்றுமில்லை, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தாய்வீடு திரும்பலாம். சஜித் பிரேமதாச ஐ.தே.கவில் வளர்ந்தவர். அவரும் எந்நேரத்திலும் வரலாம்.
அதேவேளை, உரியகாலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார். சஜித்தவோ, அநுரவோ எமக்கு சவால் அல்ல.” – என்றார்.