ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகரவை நியமித்துள்ளார்.
அதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜயசேகர, இந்த நியமனம் வழங்கப்படும் போது, ஊவா மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், சுற்றுலா, போக்குவரத்து, கலாசார மற்றும் நெசவுக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
மேலும், அவர் ஊவா மாகாண கமத்தொழில், நீர்ப்பாசனம், கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன்பிடி போன்ற அமைச்சுகளின் செயலாளராகவும், ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளராகவும், ஊவா மாகாண சபையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன், எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ அபிவிருத்தி தேசிய மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும், போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் நாயகமாகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, மொனராகலை, தனமல்வில மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும் ஜயசேகர கடமையாற்றியுள்ளார்.










