“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ்.
ஊவா பரணகம, அம்பகஸ்தோவ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
“ நாடு அசாதாரணமான சூழ்நிலையில் இருந்த போது தைரியமாக நாட்டை மீட்டெடுக்க முன்வந்த தலைவர் என்ற வகையில் பல வேலை திட்டங்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டு மக்கள் போக்குவரத்துக்கே சிரமத்திற்கு இருந்த காலம் ஒன்று இருந்தது அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசைகளில் நின்றிருந்த காலமும் இருந்தது , இன்று அனைத்தும் மாறி உள்ளது. நாடு மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பி வருகின்றது.
நாட்டை மீட்டெடுத்து வெற்றி கண்டதைப் போன்று நாட்டின் பொருளாதாரத்தை முதுகில் சுமக்கும் மலையக மக்களின் ஒரு நாள் வேதனத்தை அதிகரிக்கவும் ஜனாதிபதியால் முடியும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உள்ளது. ஆகவே பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் ஒன்றை பிரயோகித்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.










