சர்வக்கட்சி அரசமைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் அழைப்பு!

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசில் கட்சிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.

திருத்தியமைக்கப்பட்ட இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இன்று சபையில் முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போதே , நாட்டை மீட்பதற்காக சர்வக்கட்சி அரசில் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

” தற்போதைய சூழ்நிலையில் நாடு குறித்து சிந்தித்து, அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தவறுகள் இருப்பின் அதனை சர்வக்கட்சி அரசு ஊடாக திருத்திக்கொள்ளலாம். அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒதுக்கிவைத்துவிட்டு, சர்வக்கட்சி அரசில் இணையுங்கள்.” -எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பட்ஜட் உரையின் முக்கிய சில விடயங்கள் வருமாறு,

கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும், 20 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக 2 ஆயிரத்து 500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.

ஜோன்கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்று குருணாகலையில் நிறுவப்படும்.

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளித்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டம் வகுக்கப்படும்.

Related Articles

Latest Articles