ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடமாட்டார் – மீண்டும் அடித்து கூறுகிறார் பாலித ரங்கே பண்டார!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவிக்கின்றேன் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும், அதற்கு தான் தலைமை தாங்குவார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார். போராட்டக்களத்துக்கு சென்று அடிவாங்கி சஜித்துக்கு போராட்டம் என்றால் என்னவென்று தெரியுமா? சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதை அவர் நிறுத்த வேண்டும். நாட்டை நிர்வகிக்ககூடியவருக்கு இடமளிக்க வேண்டும்.

போராட்டம் அல்ல, அடுத்த ஜனாதிபதி தேர்தலில்கூட சஜித் போட்டியிடமாட்டார் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். ஏனெனில் அவரை பற்றி எமக்கு நன்கு தெரியும்.

சமூக ஊடகங்களை கண்காணிக்க பொறிமுறை அவசியம். ஏனெனில் சமூக ஊடகங்களில் தனிநபர்களை இலக்கு வைத்து வதந்திகள் பரப்படுவதால் தற்கொலை சம்பவங்கள்கூட இடம்பெற்றுள்ளன. கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கின்ற அதேவேளை அந்த சுதந்திரம் எல்லைமீறாத வகையில் பாதுகாக்க வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles