அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, ‘தாய் கிழவி’ படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேய்ச்சல் ரெபேகா, முத்துக்குமார், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். பிப்.27-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். சினிமாவில் என்னுடைய நண்பர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னைவிட சினிமாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அருண்ராஜா.
அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த எஸ்.கே.புரொடக்ஷன்ஸ். கனவோடு திருச்சியிலிருந்து வந்தவர்கள் சேர்ந்து ‘கனா’ என்ற படத்தை எடுத்தோம். பின்பு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘டாக்டர்’, ‘டான்’, ‘கொட்டுக்காளி’, ‘குரங்கு பெடல்’ என பல படங்கள் தயாரித்தோம். ‘
தாய் கிழவி’ கதையை கேட்டதுமே சிவகுமாரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ‘தாய் கிழவி’ பார்த்துவிட்டு இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என கமல் சார் சொன்னார். ‘
தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா மேடத்தைத் தவிர வேறு ஆள் கிடையாது என்பதைப் படம் பார்த்துவிட்டு அனைவரும் சொல்வார்கள். ‘சேயோன்’ படத்துக்கு அடுத்தும் மீண்டும் நான் சிவகுமாருடன்தான் படம் செய்ய இருக்கிறேன்.
எனக்கு பேரும் புகழும் கொடுத்த இந்தத் துறைக்கு நான் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி வர வேண்டும் என்ற எண்ணத்திலோ இல்லை.
நான் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விக்கு நானும் பொறுப்பு என்பதை உணர்ந்தே செயல் படுகிறேன். மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால், இன்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தடை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதையும் தாண்டி வர நான் ரெடி” என்றார்.
