” தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசு அவசியமற்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,
” நாட்டில் டொலருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையை சமாளிப்பதற்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருகின்றது. பாரியதொரு அலைக்குள் ரூபாவின் பெறுமதி சிக்கியுள்ளது.
அத்துடன் பிரச்சினை தீரப்போவதில்லை. ஜுன் மாதமளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. எனவே சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் அது எம்மிடம் ஒப்படைக்கப்படலாம் என நம்புகின்றேன்.
தேசிய அரசமைத்து அமைச்சுகளை அதிகரித்து கொள்வது அல்ல தற்போதைய தேவை. நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.” – என்றார் ரணில்.
அதேவேளை, தேசிய அரசமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்தார்.
