‘இஸ்ரேல், ஈரான் போரால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்காக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை உடன் கூட்டுங்கள்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
‘பாரசீக வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜயசந்தியை மூடும் முடிவை ஈரான் நாடாளுமன்றம் எடுத்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி. கேஸ் துறைகளில் பெரும் பிரச்சினை எழக்கூடும்.
ஏனெனில் சர்வதசே எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் 20-30 சதவீதத்துக்கிடையிலான விநியோகம் ஜலசந்தி நீர் வழித்தடம் ஊடாகவே செல்கின்றது. இது தடை பட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும் என பல தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ” – எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல், தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தை உடன் கூட்டி, எழுந்துள்ள இந்த பிரச்சினைக்குத் தீர்வுகளைக் காண வேண்டும்.
அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் பட்சத்தில் எரிசக்தித் துறையில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்ய மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது பற்றியும் ஆராயப்பட வேண்டும்.
அதேவேளை, மத்திய கிழக்கில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து ஆராய்ந்து, அவர்களினது வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கு மத்தியில் ஏதேனும் தொழில் இழப்புகள் ஏற்பட்டால், அது நாட்டை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த விடயம் உள்ளிட்ட பன்முக நோக்கிலான ஆராயந்து பார்க்குமாறு கோருகின்றேன்.
மேலும், சுற்றுலாத் துறை பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு ஆகியவற்றிலும் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை நல்கி வரும் தொழிற்துறை, விவசாயம் மற்றும் சேவைகள் துறை உட்பட ஒட்டுமொத்த துறைகளிலும் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை கையாள்வதற்கு ஏற்ற தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண வேண்டும்.” – என்றார்.
