அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை அரசு நீக்காது. எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்போம் – என்று அமைச்சர் ரேரஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பனமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நல்லாட்சியின்போது 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இது மக்களுக்கான சட்டம் என ஐக்கிய தேசியக்கட்சியால் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 19 கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெற்ற உள்ளாட்சிமன்ற, ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கினர்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குமாறு லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்துகின்றார். அதனை நாம் செய்யமாட்டோம். வாபஸ் பெறுவதற்கும், நீக்கிக்கொள்வதற்கும் சட்டமூலங்களை கொண்டுவரும் அரசு, எமது அரசு கிடையாது. அஞ்சமாட்டோம். சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்பொம்.
அதேவேளை, தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. எமது ஆட்சியின்கீழ் இதுவரையில் ஒரு அங்குலமேனும் விற்கப்படவில்லை. விற்பனைக்கும், முதலீட்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.” – என்றார்.










