‘தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்’ – சாணக்கியன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” இன்றைய தினம் மலையகத்திற்கு சென்றவேளை, சில விசேட கோரிக்கைகளுக்கு அமைவாக பலரை சந்தித்தேன். இதன்படி பல பிரச்சனைகள் எனது கவனத்துக்கு மக்கள் கொண்டுவந்தனர். அதில் மிகவும் பிரதான பிரச்சனையானது, எமது நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலை உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனை ஆகும்.

தற்போதைய அரசாங்கமானது மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உத்திரவாதம் அளித்திருந்தார்கள். ஆனால் அவர்களின் தற்போதைய கூற்றுப்படி மாதத்திற்கு 10,000 தொடக்கம் 12,000 கிடைப்பதாக சொல்கின்றனர். அதுவும் 26 வேலைநாட்களுக்குரிய தொகையாக இதனை வழங்குகின்றனர்.

இதனடிப்படையில் ஒருவரின் நாள் வருமானமானது 500 ரூபாய்க்கு குறைவாகவே காணப்படுகின்றது அதிலும் சில கழிவுகளை கழித்துவிட்டுத்தான் கொடுக்கின்றார்கள். இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கம் முக்கியமாக கவனித்து அவர்களுக்கு உரிய சரியான சம்பளத்தை உறுதி அளித்தது போன்று மிக விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று எமது தேயிலை ஆகும். அத்துடன் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்குரிய மதிப்பு மிக அதிகமாகும். இவற்றுக்கு பெரும் பல தலைமுறைகளாக பங்காற்றும் இவ் தேயிலை தொழிலாளர்களில் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles