இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதிவரை 15 லட்சத்து 41 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.
இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 293 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 81 ஆயிரத்து 949 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றவேண்டியுள்ளது.
2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 28 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 6 லட்சத்து ஆயிரத்து 508 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 28 வரை 14 ஆயிரத்து 984 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.
அதேவேளை, ரஷ்யாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் ஸ்புட்னிக் -பை தடுப்பூசி, இன்று முதல் கண்டி மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.
ஜுன் 6 ஆம் திகதியளவில் சீனாவிடமிருந்து 10 இலட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன. அதற்கு அடுத்த வாரம் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்.
இலங்கைக்கு சீனா இதுவரை 11 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்நாட்டிடமிருந்து 20 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை விலைக்கு வாங்கவுள்ளது.
பைசர் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துவருகின்றது.
ஆர்.சனத்

