நாட் கூலி முறைமைக்கு முடிவு கட்டுவதே நிரந்தர தீர்வு!
‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பானது நிரந்தர தீர்வாக அமையாது. நாட்கூலி முறைமையை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு டிக்கோயா, வனராஜா, போடைஸ், பட்டல்கள, கெர்கர்ஸ்வோல்ட், மோரா ஆகிய தோட்டப் பகுதிகளில் நேற்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு,
‘நாட்டின் ஜனாதிபதி , தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் தற்போது அவர் வாக்குறுதிகளை மறந்து எதிர்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருகின்றார்.
ஐனாதிபதி தேர்தல் காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியாக அறிவித்ததுடன், வரவுசெலவு திட்ட வாசிப்பிலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அனைத்தையும் மறந்து தோட்டக் கம்பணிகளுடன் கலந்துரையாடி முடியுமான அளவு 1700 ரூபாய் நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அறிக்கைவிடுத்துள்ளார். இதனை ஏமாற்று நாடகமாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
நான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக என்னால் முடிந்தளவிலான வேலைகளை மக்கள் நலனுக்காக செய்திருந்திருந்தேன்.
தற்போது ஜானாதிபதியால் வரவுசெலவு திட்டத்தினூடாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளுக்கான நிதி ஓதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்ட கண் துடைப்பாகவே காணப்படுகின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிறந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வாகும்.” – என்றார்.
இ.தொ.கா பிரதி தலைவர் கணபதி கனகராஜ், முன்னாள் நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேல் ரவி , உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.