‘பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுக’

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள்  மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது என சங்கத்தில் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றப்பட்டபோது, முதற்சுற்றில் முன்கள பணியாளர்களான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. அவர்களுக்கு அடுத்தக்கட்டமாக ஆசிரியர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பே அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இதன்படி பாடசாலைகள் தொடங்வதற்கு முன்பு அனைத்து கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என எமது சங்கத்தினால் 2021.02.23. அன்று  எழுத்து மூலம் கோரப்பட்டது. அந்த நேரத்தில் உங்களால்  தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்றத் தவறியதற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  எதிர்ப்புத் தெரிவிவப்பதோடு சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடல்களை நடாத்தி விரைவாக தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் மிகப் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

02 . எதிர்காலத்தில் தேசிய அளவில்  பரீட்சைகள்  நடைபெறவுள்ளது என்பதும், அதற்கு முன்  மாணவர்களைப் பாடசாலைக்கு  அழைக்க வேண்டும் என்பது தொடர்பாக நீங்கள் அறிந்த விடயமாகும்.

இத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசியின் முதலாவது அளவைக் கொடுத்து , சில மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது அளவை கொடுப்பதும்  அதன்படி நோயெதிர்ப்பானதுஉடலில் சரியாகச் செயற்பட  எடுக்கும் காலமாக அமையும் என்பது சுகாதாரத் துறையின் கருத்தாக இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டியுள்ளது.

03. இத்தகைய சூழலில், நாட்டில் 45 லட்சம்  மாணவர்கள் மற்றும் 3 லட்சம் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுவாகச் சமூகத்தின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாத  கடமையாகும்.

எனவே, மேற்கூறிய விடயங்கள் குறித்துத் அதிக கவனம் செலுத்திக் குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடி  முறையான திட்டமொன்றினை விரைவாக முன்னெடுக்குமாறு சங்கம் மீண்டும்  பொறுப்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Related Articles

Latest Articles