பாதாள குழுக்களின் பின்னணியிலுள்ள குழு தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளது எனவும், அரசியல்வாதிகளின் தொடர்பு பற்றியும் ஆராயப்படுகின்றது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று தெரிவித்தார்.
நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர், நாமலுக்கு தொடர்பான விசாரணை அரசியல் பழிவாங்கல் அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. அரசியல் அழுத்தங்களின்பேரில் விசாரணைகள் நடத்தப்படுவதும் இல்லை. கடந்த காலங்களைபோல் எமது ஆட்சியில் நடக்காது.
விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது நாமலா அல்லது வேறுநபர்களா என்பதை விசாரணை நடத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தீர்மானிக்கும். இது விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை.
பாதாள குழுக்களின் செயல்பாடுகள் திடீரென ஒரே தடவையில் அதிகரித்த நிலையில் அதன் பின்னணியில் குழுவொன்று உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பில் புலனாய்வு பிரிவு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதேபோல எமக்கு சிற்சில சமிக்ஞைகள் கிடைக்கின்றன. எனவே, முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் நாம் பின்வாங்கமாட்டோம்.
தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்ற உறுதிமொழியை மக்களுக்கும் வழங்கின்றோம். பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிராக நிச்சயம் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல்வாதிகள் இதனுடன் தொடர்புபட்டிருந்தால் விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் நாம் தயங்கப்போவதில்லை.” – என்றார்.
