“ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஐந்தாண்டுகள் ஆகின்றன. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இன்னும் நீதி நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை.
குழுக்கள் அமைக்கப்பட்டும், விசாரணை நடத்தப்பட்டும் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. நீதிக்காக மக்கள் போராடிவந்தாலும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திதாரிகளை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் நெத்திலி மீன்களே சிக்கிவருகின்றன. உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக வாழும் நிலை காணப்படுகின்றது.
சஹ்ரான்தான் இந்த தாக்குதலை நடத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், அவருடன் தொடர்பை பேணியவர்கள், சஹ்ரான் குழு சுதந்திரமாக செயற்பட இடமளித்தவர்கள், தாக்குதல் மூலம் பிரதிபலன் அடைந்தவர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நீதி நிலைநாட்டப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டாலும் சாதாரண அரசியல்வாதி, சிரேஷ்ட அதிகாரிகள், செயலாளர்களால் நீதியை வழங்க முடியாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனில், பயங்கரவாதத்தை ஒடுக்கியவர்கள், அத்துறைசார்
அனுபவம்மிக்கவர்களால்தான் அதனை செய்ய முடியும்.
எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நாட்டு மக்களுக்காக கடமையை உரிய வகையில் நிறைவேற்றுவேன். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளவன் நான். எனவே, எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த கடமையை நிச்சயம் செய்வேன்.” – என்றார் சரத் பொன்சேகா.










