2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி பல மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
ஆனால், வாக்குச் சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, உள்ளுராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் உப பிரிவு 38(1)(c)இன் பிரகாரம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வர்த்தமானியை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 59 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.