” இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகன பேரணியை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை உடனடியாக கைது செய்து, அவருக்கு எதிராக வழங்கு தொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புலிகள் அமைப்பின் அமிர்தலிங்கம் திலீபனை நினைவுகூரும் வகையில் கிழக்கில் இருந்து வடக்குக்கு வாகன பேரணி முன்னெடுக்கப்படும்போது மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நாட்டை பிளவுபடுத்தும் புலிகள் அமைப்பின் கனவு நிறைவேறுவதற்காக தனது உயிரை பலிகொடுத்தவர்தான் திலீபன். புலிகள் இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, புலிகள் அமைப்பின் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் திலீபனின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வடக்குக்கு பேரணி செல்வதற்கு அனுமதி வழங்கியது யார்? எவரேனும் அதிகாரி அனுமதி வழங்கி இருப்பாரானால் அவர் நாட்டின் அரசமைப்பை அப்பட்டமாகமீறியவராக கருதப்படுவார். அதேபோல அதிகாரிகளுக்கு அரசியல்வாதி எவரேனும் இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கியிருந்தால் அவரும் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.
புலிகள் அமைப்பு என்பது அப்பாவி சிங்கள மக்களை இலக்கு வைத்து 300 இற்கு மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்பாகும். புலிகளின் தாக்குதல்களால் தமது உறவுகளின் எவரேனும் ஒருவரை சிங்கள சமூகம் இழந்திருக்கும். எனவே, அவ்வமைப்புமீது சிங்கள மக்களுக்கு எதிர்ப்பு, வைராக்கியம், கோபம் இருப்பது இயல்பே.
இவ்வாறானதொரு பின்புலத்தில் புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து, கிழக்கில் சிங்கள கிராமம் ஒன்றின் ஊடாக வாகன பேரணியை முன்னெடுத்திருப்பது இனவாதத்தை தூண்டி, மக்களை குழப்பும் சூழ்ச்சி நடவடிக்கையாகும். கஜேந்திரகுமார் ஒரு புறத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். மறுபுறத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஏற்பாடுகளை மீறியுள்ளார். எனவே, கஜேந்திரன் எம்.பி. உடன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முறைப்பாடு கிடைக்கவில்லை என பொலிஸார் கூறலாம். எனவே, நாம் நாளை முறைப்பாடு செய்வோம்.
மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டதில் தவறு இருக்கலாம். ஆனால் மக்களை குழப்பும் வகையில் செயற்பட்ட கஜேந்திரன் எம்.பில் இருந்தே சட்டம் செயல்பட தொடங்க வேண்டும்.” – என்றார்.
