பென்டோரா ஆவணத்தில் பெயர் அம்பலமாகியிருக்கும் அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 02 டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அன்றாட செலவை ஈட்டிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறான நிலையில் நாட்டில் தனவந்தர்கள் சிலர் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பென்டோரா ஆவணம் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. பென்டோரா ஆவணத்தில் இதற்கு முன்னர் பல்வேறு தரப்பினரின் பெயர்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இந்த முறையே முதல்தடவையாக அரசியல்வாதி ஒருவரின் பெயர் வெளிவந்திருக்கின்றது. நிரூபமா ராஜபக்ச மற்றும் திருக்குமார் நாடேசன் ஆகியோரின் பெயரில் இருக்கும் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றார்.










