க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/ தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,
க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகம் (Updated) மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி) ஆகிய முகவரிகளிலும் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், CEWET மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ.இலக்கம்-882, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2024 ஏப்ரல் 29ஆம் திகதிக்கு முன்னதாகக் கிடைக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்படுதல் வேண்டும்.











