” இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. – இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள்.
இன்றைய நிலவரப்படி காசாவில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில்தான் அங்கிருந்து இப்படியொரு வேதனைக் குரல் ஒலித்துள்ளது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இன்றுவரை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்பதே இஸ்ரேலின் முழுக்கமாக இருக்கிறது. இந்த உறுதிப்பாட்டை முன்வைத்தே இடையில் லெபனான், சிரியா, ஏமன், ஈரான், கத்தார் எனப் பல நாடுகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவிட்டது.
இதில் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. காசாவில் வான்வழித் தாக்குதல் எவ்வளவு சேதாரத்தை விளைவிக்க முடியுமோ அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், தற்போது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம்
பல்வேறு தாக்குதல்கள் மூலம் காசாவாசிகள் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாலஸ்தீனியர்கள் அல் மவாசி பகுதிக்குப் பெயரும்படி இஸ்ரேல் படைகள் வலியுறுத்தி வருகின்றன. அங்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை காசாவில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் வெளியேறிவிட்டனர்.
எஞ்சியிருப்பவர்களில் சிலர் வெளியேற ஆசைப்படுகின்றனர். ஆனால், தங்களிடம் பசிக்கு ரொட்டி வாங்கக் கூட பணமில்லை எங்கே செல்வது என்று கேட்கின்றனர். இன்னும் சிலர், நாங்கள் எங்கே செல்ல முடியும். இது எங்கள் மண். மரணம் வரும்வரை இங்கேயே இருக்கிறோம் என்று கூறுகின்றனர்.
காசாவில் இஸ்ரேல் செய்தது இனப் படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்றும் ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசா போரை நிறுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நீர்த்துப் போகச் செய்தது. இதனை சுட்டிக்காட்டி அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.










