” பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை இல்லை. நீண்டகாலமாக இவ்வாறே வாழ்ந்துவருகின்றனர். மலையக மக்களின் கண்ணீரிலும், இரத்தத்திலும், வியர்வையிலும்தான் 200 ஆண்டுகள் கடந்துள்ளன.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையை வருமானம்மிக்க நாடாக மாற்றிக்கொடுத்தவர்கள் எமது மலையக சகோதரர்கள். ஆனால் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை இன்றளவிலும் அம்மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
மலையக மக்களுக்கு நாட் சம்பளமாக வழங்கப்படும் 600 ரூபா சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும்? எதற்காக அம்மக்களுக்கு இப்படி பாரபட்சம் காட்டப்படுகின்றது? அவர்களை இலங்கை பிரஜைகளாக ஏற்றிருந்தால் சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுங்கள்.
மலையக மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.” – என்றார் ஶ்ரீதரன்.










