போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரச கொள்கையின் அடிப்படையிலேயே வரி குறைப்பு செய்யப்பட்டது. அதற்கு நாடாளுமன்றத்தில் எதிரணிகளும் வாக்களித்துள்ளன. ஆனால் நாம் பொறுப்பு கூற வேண்டும் எனக் கூறப்படுகின்றது. எனவே , எதிர்காலத்தில் வரி அதிகரிப்பு இடம்பெற்றால் அதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதற்கான முயற்சி இன்று எடுக்கப்பட்டது அல்ல, போரை முடிவுக்கு கொண்டுவந்த நாளில் இருந்து அதற்கான முயற்சி இடம்பெறுகின்றது. அத்துடன், அறகலய காலத்தில் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை வீட்டுக்குள் வைத்தே கொலை செய்துவிட்டு தீ வைத்து எரிப்பதற்கு முற்பட்டனர். அந்த முயற்சியும் கைகூடவில்லை. அதனால்தான் வரி குறைப்பு செய்ததை அடிப்படையாகக்கொண்டு தற்போது இந்த முயற்சி இடம்பெறுகின்றது.
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுவருகின்றோம்.” – என்றார் நாமல்.