மாணிக்கக்கல் தோண்டிய ஐவரில் ஒருவர் பலி; நால்வர் கைது

கந்தப்பளை ஹய்பொரஸ்ட் மாகுடுகலை பிரதேசத்தில் இயற்கை வனபகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

மாகுடுகலை பிரதேசத்தில் ஐவர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஒருவர் மீது பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகுடுகலை அப்பில் பாம் பகுதியில் (சிரச வன பகுதி) என அழைக்கப்படும் இலக்கம் 03 இயற்கை வனத்தில் பொகவந்தலாவை பிரதேசத்திலிருந்து ஐவர் வருகை தந்து அங்கு மாணிக்கக்கல் அகழ்வில் நேற்றுமுன்தினம் இரவு ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பாரிய குழியொன்றை தோண்டி அங்கு ஐவரில் இருவர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் போது மண்மேடுடன் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதில் பொகவந்தலாவ குயினா தோட்டத்தை சேர்ந்த அம்மாசி விஜயகுமார் வயது (40) என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். .

இவரை சுமந்து கொண்டு ஏனைய நான்கு பேரும் வனப்பகுதியிலிருந்து நேற்று (22) அதிகாலை ஹைபொரஸ்ட் பிரதான வீதிக்கு வருகை தந்துள்ளனர். அதேநேரத்தில் காட்டுக்குள் சிலர் மாணிக்கக்கல் அகழ்வதாக மாகுடுகலை வன காரியாலயத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போது அங்கு காயங்களுக்கு உள்ளான ஒருவரை சுமந்து கொண்டு நால்வர் வருவதை அவதானித்த அதிகாரிகள் இவர்களை கைது செய்ததுடன் காயங்களுக்குள்ளானவரை உடனடியாக ஹைபொரஸ்ட் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

Related Articles

Latest Articles