நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று நேற்று (30) அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
இந்தக் காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இக்காட்டு யானை 25 வயது மதிக்கத்தக்கதென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடொன்றிலிருந்து அதிவலு கொண்ட மின்சாரத்தைப் பெற்று யானைவேலியில் பொருத்தியமையின் காரணத்தினாலேயே யானை உயிரிழந்துள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது வீட்டின் உரிமையாளர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாகவும் அவரது தாயார் இந்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாகவும் இவ்வாறு யானைவேலிக்கு அதிவலு கொண்ட மின்சாரம் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பில் தனக்கு தெரியாதெனவும் 75 வயதுடைய தாயார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மற்றும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இனைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
