மட்டக்களப்பு − களுவாஞ்சிக்குடி பகுதியில் கைக்குண்டொன்றுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி வீதித் தடையை மீறி, பயணித்த ஒருவரை, விசேட அதிரடி படையின் மோட்டார் சைக்கிள் படை, பின் தொடர்ந்து நேற்று (13) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, விசேட அதிரடி படை, களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இதன்போது, நடத்தப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் புனர்வாழ்வு அளிக்கப்படாதவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், சந்தேகநபரிடம் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.