” பிரச்சினைகளை பேச்சுமூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. பிரச்சினைக்கு போர் என்பது தீர்மாக அமையாது. உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் எந்தவொரு பக்கத்துக்காகவும் கதைக்கமுடியாது.” – என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரஷ்ய, உக்ரைன் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் என்ன நடக்கின்றது என நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அளவுக்கு எமது நாடு பொருளாதார மட்டத்தில் பலமடையவில்லை. அனைத்து நாடுகளுடனும் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடவே எதிர்ப்பார்க்கின்றோம். ரஷ்யா, மற்றும் உக்ரைனில் இருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.
எனவே, தற்போது ஏற்பட்டுள்ள போர் சூழல் எமது நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பாரியளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் அதற்கு கூடுதல் விலையை கொடுக்க நேரிடும். தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் ஏற்படும்.

உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எகிப்தில் உள்ள தூதரகம் தொடர்பிலேயே இருக்கின்றது. வெளியேறுமாறு நாம் முன்கூட்டிலே அறிவித்தோம். சிலர் வெளியேறி உள்ளனர். ஏனையோர் தொடர்பில் உள்ளனர். பெஸருசில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு பொறுப்பை அங்குள்ள பல்கலைக்கழகம் ஏற்றுள்ளது.
தூதரகங்கள் மற்றும் ஏனைய மூலங்களில் கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் நாம் ஆய்வுசெய்துவருகின்றோம். பேச்சு மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாம் கருதுகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் யுத்தம் தீர்வாகாது. இது விடயத்தில் எந்த பக்கத்துக்காகவும் எமக்கு கதைக்க முடியாது. சர்வதேச விவகாரங்களின்போது நிதானமாக செயற்பட வேண்டும்.” -என்றார்.
