நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இறுதி பாதீடு இதுவாகவே அமையும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களுமே நாடு வங்குரோத்தடைய காரணம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இன்னமும் சிலர் ராஜபக்சக்களுக்கு சோரம்போகும் வகையில் சபையில் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். ஆடை அணிந்துகொண்டா அவர்கள் உரையாற்றுகின்றனர் என தெரியவில்லை.
வரி நிவாரணம் வழங்கியதால்தான் கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் போனால் எனக் கூறுகின்றனர். தனது சகாக்களுக்கே கோட்டாபய ராஜபக்ச வரி விலக்களித்தார். 30 வீதத்தால் வரி வருமானத்தைக் குறைத்து, அரசின் வருட வருமானத்தை 680 பில்லியன் ரூபாவால் குறைத்துதான் நாட்டை வங்குரோத்தடையச்செய்தனர். இவருக்கு தண்டனை வழங்ககூடாதா?
சட்டம் என்னவென்று எனக்கு தெரியாது, ஆனால் இவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுத்து, சிவில் உரிமைகளை இல்லாது செய்ய வேண்டும். 2 கோடியே 20 லட்சம் மக்களை பள்ளத்தில் தள்ளியவர்கள் இவர்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் இறுதி பாதீடாகவே இது அமையும். ” – என்றார்.