ராஜபக்சக்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோப்பூர்வ வதிவிடத்தில் நேற்று நடைபெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, அமைச்சர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, இராஜங்க அமைச்சர் சஷிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க ஆகிய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை, அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உட்பட அரசியல் ரீதியிலான குழப்பங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
பஸில் ராஜபக்சவால்தான் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற மொட்டு கட்சி உறுப்பினர்களின் வாதத்தால், கோட்டா பெயில் என்ற எதிரணியின் பிரச்சாரம் உண்மையாகின்றது என கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.
இந்த விடயம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சந்திப்பு நீண்டநேரம் இடம்பெற்றிருந்தாலும் காத்திரமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அதேவேளை, பஸில் ராஜபக்ச எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றம் வரமாட்டார் என தெரியவருகின்றது. பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக எம்.பியொருவர் பதவி விலகவேண்டும். அதன்பின்னர் புதியவரின் பெயர் முன்மொழியப்பட்டு அது வர்த்தமானியில் வெளியாக வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை இருப்பதால் பஸிலின் வருகை சற்று தாமதமாகலாம் என தெரியவருகின்றது.
இதற்கிடையில் தமது நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவுடன், பஸில் ராஜபக்ச தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளார் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.










