“தமிழக மீனவர்கள் நவீன இராட்சத படகுகளின் துணையோடும், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளுடனும் இலங்கையின் வடபிராந்திய கடற்பகுதியில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்வளத்தை கொள்ளையிட்டு செல்கின்றனர். இச்செயற்பாடு வடபிராந்திய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, இலங்கையின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் விடயம் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.”
இவ்வாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ் ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“பொருளாதார நெருக்கடியாலும், காலநிலை மாற்றத்தாலும் மீனவத் தொழிலாளர்கள் மிக மோசமான நெருக்கடிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் மீன் பிடி தொழிலை வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள வடபிராந்திய மீனவர்களுக்குபாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்திய தமிழக மீனவர்கள் அதி நவீன படகுகளுடன் இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி உட்புகுந்து மீன் குஞ்சிகளைக் கூட விட்டு வைக்காது அனைத்தையும் அள்ளிச் செல்கின்றனர்.
ஆகவே எமது நாட்டின் மீன்வளத்தை இன்னுமொரு நாடு அடாத்தாக அபகரித்துச் செல்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தோடு பேசி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் பொருத்தமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதேவேளை வடபிராந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை எட்டும் வகையில் மீனவ உறவுகள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் உட்பட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆ.ரமேஷ்










