கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் (கண்ணூசாமி நாயக்கர்) 189 ஆவது குரு பூஜை விழா நாளை 30ஆம் திகதி சனிக்கிழமை தமிழகத்தின் வேலூர் நகரில், புதுப் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கண்டி மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கண்டி மன்னரின் வாரிசுகளில் ஒருவரான வி.அசோக்ராஜாவினால் வருடந்தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு இந்த வருடமும் வெகுவிமர்சையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கண்டி மன்னரின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்த்தி வைக்கப்பட்டிருக்கும் மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு மாலை 4 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
மேலும் இதன் போது மன்னரின் வாரிசுகளில் ஒருவரான வி. அசோக்ராஜா வேலூர் புதுப் பேரூந்து நிலையத்துக்கு அருகிலிருக்கும் செல்லியம்மன் ஆலயத்திலிருந்து குதிரையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக முத்து மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்னரே மன்னருக்கான பூஜைகள் ஆரம்பமாகும்.
