இம்முறை எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்றும் அடுத்து ஐந்து வருடம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே நுவரெலியா மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டுவர வழி ஏற்படுத்தும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரபு,
இதுவரை இந்த மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தார். ஆனால் விளையாட்டுத் துறைக்கு ஒன்றையும் செய்யவில்லை. கல்வி அமைச்சர் இருந்தார். கல்வியின் தரமும், பாடசாலைகளும் அப்படியே இருக்கின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் இருந்தார். லயன்கள் இன்னமும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. 50 ரூபா சம்பளத்தைக் கூட இவர்களினால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
அடுத்த ஐந்து வருடங்களும் ஜனாதிபதி, பிரதமர் கீழே ஆட்சித் தொடரப் போகிறது. எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதன் மூலமே மக்களுக்கான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் இடைத் தரகர்கள் யாரும் இல்லை. நான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் நேரடியாக பேசுவேன். என்னை களமிறக்கியது அவர்களே. அதனால் மக்கள் எதற்காக வாக்களிக்கிறார்களே அந்தத் தேவையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, உங்களின் வாக்குகளைக் குப்பையில் போட்டுவிடாதீர்கள். மொட்டுச் சின்னத்திற்கு மலையக மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும். எனது சொந்த செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன். அதற்கும் தடை ஏற்படுத்தினார்கள். எனவே அபிவிருத்தி செய்யக்கூட அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் தர வேண்டும் என மக்களிடம் உரிமையாக கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அங்கீகாரத்தைத் தந்தபின்னர், நுவரெலியாவிற்கான அபிவிருத்தி நான் நேரடியாக எடுத்து வருவேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.” என்று முத்தையா பிரபு மேலும் தெரிவித்தார்.