வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஓர் ஆரம்பமாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள விடயமாகும், அது முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. 2019 ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பல கருத்துகள் உள்ளன. அப்பகுதிகளில் உள்ள கட்சிகளுக்கிடையில்கூட கருத்து முரண்பாடுகள் உள்ளன. எனவே, அது தொடர்பில் நாம் முடிவெடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு தற்போது தனித்தனி மாகாணங்களாகவே உள்ளன. இந்நிலையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவே 13 இருக்கின்றது. வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளும் 13 ஐ ஆரம்ப தீர்வாக ஏற்றுள்ளன.” – என்றார்.
