அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான மற்றுமொரு கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருந்தன.
அண்மையில் கொழும்பில் கூடி சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தன. இதனையடுத்து சர்வக்கட்சி கூட்டத்தைக்கூட்டி இது தொடர்பில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு பஸில் விளக்கமளித்தார். அதன்பின்னர் இப்பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.

எனினும், பங்காளிகள் இன்னும் உடன்படவில்லை எனவும், இது விடயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலேயே 5 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், அவரை சந்தித்து இது விடயம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கும் பங்காளிகள் தீர்மானித்துள்ளன.










