இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது, “நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பயனற்றது. இது இலங்கையில் உள்ள சமூகங்களை துருவப்படுத்தக் கூடிய செயற்பாடாகும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடா உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
………
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்தும், தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது இந்திய நிதி அமைச்சரிடம் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது.
இலங்கைக்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது முழுமையான உதவிகளை வழங்கும் எனவும் இந்தியா பங்களாதேஷிற்கு வழங்கிய முழுமையான உதவியால் இன்று பங்களாதேஷ் முன்னேற்றம் அடைந்து வருவது போல் இலங்கையும் முன்னேற்றமடைய வேண்டும் என இந்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வரலாறு புத்தகத்தை இ.தொ.கா சார்பில் செந்தில் தொண்டமான் இந்திய நிதி அமைச்சருக்கு வழங்கி வைத்தார்.










