“ தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே உள்ளது. நான் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றாமல் எனக்குக் கிடைத்த அமைச்சை வைத்து நிறைவான சேவைகளை செய்து காட்டியுள்ளேன். எனவே, அடாவடித்தனம் செய்தும், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தும் மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. சஜித் தலைமையிலான நல்லாட்சியில் மலையகத்தில் மீண்டும் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்வேன்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சாமிமலை மாநிலு தோட்டத்தில் இடம்பெற்ற கூரைத் தகரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதித் தலைவர் எம். உதயகுமார் எம்.பி., பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். அவர் மேலும் பேசுகையில்,
2013 ஆம் ஆண்டு என்னால் பெற்றுக் கொடுக்கப்பட்ட சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த கூரைத் தகடுகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்காமல் முடங்கிக் கிடந்ததை காலநிலை சீரற்றுள்ள காலத்தில் மக்களுக்கு கையளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். நான் சில அரசியல்வாதிகளைப் போல வாயால் வடை சுட்டதுமில்லை, இனிமேல் சுடப் போவதுமில்லை. தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடியதும் கிடையாது, கவர்ச்சிக்காக சண்டித்தனம் காட்டி. அரசாங்க வளங்களைப் பயனபடுத்திக் கொண்டு அடாவடித்தனம் செய்து கூத்தடித்ததும் கிடையாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து காணி உறுதிப் பத்திரங்களை வழங்கியபோது, அந்த வீடுகளை “குருவிக் கூடுகள்” என்று விமர்சித்து ஏளனம் செய்தார்கள். இன்றைய அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 20 பேர்ச் காணியில் “சிலப்” போட்டு வீடுகளைக் கட்டிக் கொடுக்கப் போவதாகவும், பல்கலைக் கழகம் அமைக்கப் போவதாகவும் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவுமே மக்களுக்குக் கிடைக்கவில்லை. இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்துக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. கூட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறி ஏமாற்றுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்னும் மூன்று மாத காலத்தில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிந்து விடும்போது மலையக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுபவர்களின் ஆட்டமும் அடங்கி விடும், முகத் திரையும் விலகி விடும். நான் கூறுகின்ற தொப்பி யாருக்கு பொருத்தமாக இருக்கின்றதோ அவர்கள் அணிந்து கொள்ளலாம்.
அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வரும்போது, அபிவிருத்தித் திட்டங்களுடன் தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக நிச்சயம் மாறுவார்கள். நான் அமைச்சராக வரும்போது. என்னுடைய கட்சிக்கு வந்தால் தான் வீடுகள் கிடைக்கும் என்ற நிலைமை இருக்காது. நான் இதுவரை செய்துள்ள சேவைகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.