” இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.” – என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி பிரதேசத்தில் பாரிய மழை வீழ்ச்சி பதிவான நிலையில் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளானது.
இதனையடுத்து பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பாதிப்பிற்குள்ளான இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சகல வசதிகளுடனும் கூடிய மூன்று மாடி கட்டிடத்தை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணித்து தருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் பாடசாலையின் அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.










