கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வைத்தியசாலையின் 3 வார்ட்களை (Ward) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அனோஜ் ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
தமது வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு எழுமாற்றாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், வார்டொன்றில் பணிபுரியும் வைத்தியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அங்கு சிகிச்சை பெற்று வந்த 9 நோயாளர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையின் 4 ஊழியர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வார்ட் மூடப்பட்டதாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் அனோஜ் ரொட்ரிகோ கூறினார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இதுவரை 15 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புகளை பேணிய 101 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் தற்போது ஆளனி பற்றாக்குறை நிலவுவதால், வைத்தியசாலையின் ஏனைய இரண்டு வார்ட்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.