உணவுப் பொதியின் விலை அதிகரித்ததை அடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தற்போது எரிவாயு கொள்கலனை 4 ஆயிரம், ஐயாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக, உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாவாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாவாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாவாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில், வடையும், தேநீரும் சிற்றுணவகங்களின் பிரதான விற்பனைப் பொருட்களாக மாறியுள்ளன.
அத்துடன், பராட்டாவும் விற்பனையாவதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.