சீனா உலக நாடுகளில் வளர்ச்சியடையாத மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. இதனையொரு அரசியல் வியூகமாகவே செய்துவருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். அத்துடன், ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் சீனாவின் பொருளாதார ஆதிக்கம் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றே இலங்கையிலும் சீனா தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இலங்கைக்குள்ள கடன்களில் சுமார் 10 வீதம் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்களாகும். 10 வீத கடன் ‘மட்டுமே’ சீனாவிடமிருந்து பெறப்பட்டது என்ற வாதங்களும் இருக்கின்றன. ஆனால் அந்த 10 வீதக் கடன்களினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களும், நெருக்கடிகளும் அதிகமானவை. அத்துடன் சீனாவின் ஆதிக்கம் என்பது இலங்கையில் அதிகரித்துள்ளது. இந்த ஆதிக்கத்தை நிலைகொள்ளச் செய்வதற்கு சீனா பயன்படுத்தும் ஆயுதம் கடன்.
இலங்கையில் சீனாவின் மிகப் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகம், தாமரைக் கோபுரம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகிய திட்டங்களைக் குறிப்பிடலாம். இந்த செயல்திட்டங்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எடுத்துக் கொண்டால், இதுவரை எவ்வித இலாபகரமான பயணத்தையும் அந்த துறைமுகம் ஆரம்பிக்கவில்லை.
இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகமானது இலங்கையின் தேவைக்காக அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கையை கடன்பொறியில் சிக்கவைக்கும், வெற்றியளிக்காத ஒரு திட்டமாகவே பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய வருமான துறையாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் காணப்படுகின்ற நிலையில் சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு சலுகையுடன்கடன்களை வழங்கியது.
சீன கடன் குறித்து சர்வதேச கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கை உட்பட 24 நாடுகளுடனான 100 கடன் ஒப்பந்தங்களை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் எந்தளவு உள்ளது என்பது உணர முடியும். 2017 ஆம் ஆண்டில், துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியதால், சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான 99 வருட ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டது.
எனவே இந்த துறைமுகத்தை 100 வருட குத்தகைக்கு அல்லது அதற்கு அப்பால் சீனாவால் எடுத்துக்கொள்வதற்கு முடிகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது சீனா பல வெளிநாடுகளில் பின்பற்றும் மூலோபாயம் இதுதான்.
மத்தல விமான நிலையம்
தெற்கில் விமான நிலையமொன்றை அமைக்க வேண்டும் என்ற செயல்திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுத்திருந்தார். சீனாவிற்கு மிக நெருக்கமாக செயல்பட்ட நிலையில் அதிக வணிக வட்டிக்கு கடனைப் பெற்று இந்த விமான நிலையத்தை அமைக்கும் பணிகளை மகிந்த ராஜபக்ச முன்னெடுத்திருந்தார். இதற்கு அவரது பெயரையும் சூடிக்கொண்டார். ஆனால் இன்னமும் தேவையானளவு விமானங்கள் வராத சர்வதேச விமான நிலையமாக இது இருக்கிறது. அத்துடன் இந்த செயல்திட்டத்தினால் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்புக்களும் மிக அதிகம். ஆனால், அரசியல் ரீதியாக மகிந்த தரப்பினர் பயன்பெற்றாலும், நாடு என்ற ரீதியில் மேலும் கடன் சிக்கலுக்குள் இலங்கை விழுந்தது. இன்னமும் அந்த விமான நிலையத்தில் வருமானம் பெறுவதற்கு திட்டங்கள் வகுக்ககப்பட்டாலும், அந்த இலக்கை நோக்கிப் பயணிப்பதாக தெரியவில்லை.
ஏற்கனவே கடன் பிரச்சினையில் திண்டாடிக் கொண்டிருக்கும் போது சீனா, மத்தல விமான நிலைய செயல்திட்டத்திற்கு கடன் வழங்கியது. குறிப்பாக எங்களுக்குத் தெரியும், ஒரு செயல்திட்டத்தை முன்னெடுக்கும் போது அல்லது ஒரு வர்த்தகத்தை முன்னெடுக்கும் போது வங்கிகளிடம் அதற்கு கடன் கோரி விண்ணப்பம் முன்வைத்தால், அந்தத் திட்டம் வெற்றியடையும், தமது கடன் தவணை சரியாக செலுத்தப்படுமா என்பதை குறித்த கடன் வழங்கும் தரப்பு பார்ப்பதுண்டு. ஆனால் மத்தல விமான நிலையத்தின் செயல்திட்டத்தை சீனா ஆராய்ந்து பார்த்ததா? அப்படியானால் ஏன் தோல்வியுற்றது? என்ற கேள்விகள் இருக்கின்றன. அப்படிப் பார்த்திருந்தால் சீனா கடன் வழங்கியிருக்காது. இவை அனைத்தையும் பார்க்கமால் அதிக வட்டியில் சீனா கடன் வழங்கக் காரணம் இலங்கை மேற்கொள்ளும் வெற்றியடையாத திட்டங்களுக்கு கடன்களை வழங்கி, இலங்கையை தொடர்ந்து கடன் பொறியில் சிக்கவைப்பதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
தாமரைக் கோபுரம்
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இலங்கையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் இதற்கு செய்த முதலீட்டுக்கான கடனை எவ்வாறு திரும்பிச் செலுத்துவது என்பதும், இந்த செயல்திட்டம் வெற்றியளிக்குமா என்பதும் எதிர்கால நகர்வுகளிலேயே அமைந்துள்ளன. எவ்வாறாயினும், இந்தத் திட்டத்திற்கும் சீனாவே கடன்களை வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், தாமரைக் கோபுரம் திட்டத்தை முன்னெடுக்கும் போது அண்டைய நாடான இந்தியாவின் கரிசனை அதிகமாக இருந்தது. இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சீனாவின் மறைமுக அழுத்தத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த செயல்திட்டமும் இழுபறி நிலையில் இருந்தபோதிலும், தற்போது அந்தத் திட்டம் உயர்பெற ஆரம்பித்துள்ளது. ஆனால் எடுத்தக் கடனை அடைப்பதற்கான வருமானம் அதிலிருந்து எப்போது வரும் என்பது மிகப் பெரிய கேள்வியே.
கடன் மறுசீரமைப்பில் இழுத்தடிப்பு!
சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் பல தோல்வியடைந்ததாக அல்லது இன்னும் வெற்றிபெறாத திட்டங்களாகவே இருக்கின்றன. இவ்வாறான திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய சீனா, இலங்கையை கடன்பொறியில் சிக்கவைத்துள்ளதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. அத்துடன், இலங்கை கடன்களை செலுத்த முடியாமல் வங்குரோத்து அடைந்திருந்த தருணத்தில்கூட, அதிலிருந்து மீள்வதற்கு சீனா உதவி செய்ய முன்வரவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கு கடன் வழங்குனர்களுடன், கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்று ஐ.எம்.எவ். கடுமையான நிபந்தனை விதித்திருந்தது. இந்த இணக்கப்பாட்டை எட்டுவதில் சீனா மிகப் பெரிய இழுத்தடிப்பைச் செய்திருந்தது. இறுதித் தருணம் வரையில் கடன் மறுசீரமைப்பிற்கு இணங்காமல் இழுத்தடிப்புச் செய்த பின்னரே, கடுமையான நிபந்தனைகளுடன் இதற்கு இணக்கம் வெளியிட்டது. இறுதிவரை இழுத்தடிப்புச் செய்த சீனா, இறுதியில் எவ்வகையான நிபந்தனைகளை விதித்தது என்பதை அறிய முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் ஊடகவியலாளர்களுக்கு கைகூடவில்லை. அந்தக் கடுமையான நிபந்தனைகள் என்னவென்று தற்போதைக்கு வெளியே செல்ல முடியாது என்று இதுகுறித்து பேச்சு நடத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருந்த தகவல் மட்டும் கிடைத்தது. இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு சீனாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதே ஒரு வெற்றியென அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட வெள்ளையானைத் திட்டங்கள், இலங்கையை கடன் பொறியில் சிக்கவைத்தது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.