உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பெரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில் ஆதிக்கம் செலுத்தும் உலகிற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி உகந்தது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்று, உலகளாவிய கடன் மற்றும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் கடன், பெரிஸ் கிளப்பில் அங்கத்துவர் அல்லாத கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச பிணைமுறிச் சந்தை ஆகிய தரப்புக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள நிதி வளங்களை கடன் சேவையாகப் பெற்றுக்கொள்ளும் போது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அத்தியாவசியமான பொது சேவைகள் மற்றும் மனித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான செலவுகளுக்கு நிதி வசதிகளை வழங்க முடியாமல் போவதுடன், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21) ஆரம்பமான 77 மற்றும் சீனா 3ஆவது தென்துருவ நாடுகளின் உச்சி மாநாட்டில் (3rd South Summit of the Group of 77 & China) உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய கூட்டணியாக, G77 ஆனது உலகளாவிய தென்துருவ நாடுகளுக்கு தமது கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும், நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்குள் சர்வதேச பொருளாதார பிரச்சினைகளை கூட்டாக ஆராய்வதற்கும் வாய்ப்பு வழங்குகிறது.
வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அதன் 134 உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அதன் 3 ஆவது தென்துருவ நாடுகளின் மாநாடு ‘யாரையும் கைவிட மாட்டோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கூட்டப்பட்டது.
G77 மற்றும் சீன மாநாட்டின் தலைமைப் பதவியை முன்பு கியூபா வகித்ததோடு இம்முறை அது உகாண்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.










