நாட்டின் அரசியல் சமூக பொருளாதார சூழல்நிலை காரணமாக மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் வாழ்வாதாரமே மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதேநேரம் தொழிலாளர்கள் மீதான தோட்டக் கம்பனிகளின் புறக்கணிப்புகளும் நெருக்கடிகளும் மோசமான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. எனவே மலையகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எழுச்சியுடன் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாதுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
ம.ம.மு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை, டயகம, மன்ராசி தலவாக்கலை லிந்துல பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற அமைப்பாளர்கள், தோட்டக்கமிட்டித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான மக்கள் சந்திப்புடனான கலந்துரையாடல்களிலேயே சதீஷ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போதிய வருமானமின்மை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு, இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் சிறு கைத்தொழில்களின் வீழ்ச்சி காரணமாக பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெருந்தோட்ட தனியார் கம்பனிகளின் நிர்வாகம் மீதும் மக்கள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.
மலையக மக்களின் உரிமைகள் சார்ந்த அபிவிருத்தி, நிர்வாகம், வீடமைப்பு சுகாதாரம், கல்வி மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் நிர்வாகிகளால் அலட்சியம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த சமூகமும் வாழ்வாதார சவால்களை எதிர் கொண்டுள்ளது.
மஸ்கெலியா பொகவந்தலாவ பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகள், அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சம்பவங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கின்றன. எனவேதான் இவ்வாறான நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் பயனளிக்காத பட்சத்தில் மலையகம் சார்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் சிவில் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது தனிப்பட்ட அரசியல் பேதங்களை ஒதுக்கிவைத்து விட்டு சமூக அக்கறையுணர்வோடு ஓரணியில் நின்று போராட வேண்டுமென கருதுகின்றனர்.
த.மு.கூ, இ.தொ.கா, ம.ம.மு, தொ.தே.ச, இ.தே.தோ.தொ.ச, கூட்டு கமிட்டி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் அனைத்து நாடாளுமன்ற அங்கத்தவர்கள், வர்த்தகப் பிரிவினரும் ஒன்றாக இயங்குவதன் மூலமாக தொழிலாளரின் பலத்தை வெளிபடுத்த வேண்டுமென பலரும் விரும்புகின்றனர்.
கடந்தகால வரலாற்றில் இந்த மக்களின் அனைத்து உரிமைகளையும் போராட்டங்கள் மூலமாகவே பெறப்பட்டுள்ளன. தோழில் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு மட்டங்களில் அடையாள வேலநிறுத்தங்கள், அமைதிப் பேரணிகள், பிரார்த்தனை இயக்கம், பொதிகளை ஏற்றுவதில் மெதுவான நடைமுறைகள், குறித்த நேரத்தில் மட்டும் வேலைசெய்தல் போன்ற பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயக ரீதியில் வெற்றிகளை கடந்து வந்துள்ளனர்.
இப்போது மலையக மக்களின் வாழ்வாதாரம் சமூக ஏற்றம் தொடர்பாக அனைத்து இன சமூகங்கள் மத்தியிலும் பரஸ்பர புரிந்துணர்வு காணப்படுகிறது. சாத்வீக போராட்டங்களுக்கு நாட்டின் சகலதரப்பு மக்களினதும் தார்மீக ஆதரவை பெறமுடியும். இளைய தலைமுறையினர் தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்களை நியாயமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைமை ஊடகங்களில் காட்டப்படுகின்றது. எனவேதான் மலையக மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசியல் கட்சிகள், தூதரக அதிகாரிகள், மற்றும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டுமென வலியுறுத்தும் நிலைகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் அனைவரும் இணைந்து தீபாவளி பண்டிகைகளின் பின்னர் அடுத்து வரக்கூடிய பொருத்தமான நாட்களில் எமது பலத்தை வெளிபடுத்த முன்வாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
